கோலாலம்பூர், 29 ஏப்ரல் (பெர்னாமா) - மலேசியாவிற்கு நான்கு நாள்கள் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டிருக்கும் மாலத் தீவு அதிபர் டாக்டர் முஹமட் முய்சு, இன்று கோலாலம்பூர், பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரத்திற்கு வருகைப் புரிந்தார்.
காலை மணி 9.30 அளவில் வருகை புரிந்த முய்சு மற்றும் அவரது குழுவினரை, சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அஹம்ட் மற்றும் மலேசிய பெட்ரோலிய நிர்வாகத்தின் மூத்த உதவித் தலைவர் டத்தோ பாச்சோ பிலோங் ஆகியோர் வரவேற்றனர்.
முதல் மற்றும் இரண்டாம் கோபுரத்தை இணைக்கும் பாலமான Skybridge KLCC-ஐயும், இரு கோபுரங்களில் உள்ள கண்காணிப்பு தளத்தையும் பார்வையிட்ட முய்சு, அங்கு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நேரத்தை செலவிட்டார்.
உலகின் மிக உயரமான இரட்டை கோபுரத்தின் கட்டிடக் கலையின் வரலாறு குறித்து அதன் சுற்றாலா நிர்வகிப்பு சேவை நிர்வாகி சாஃபுல் பஹாரி டின், முய்சுவுக்கு விளக்கினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான அரச தந்திர உறவுகளை வலுப்படுத்துவதற்கு பல்வேறு துறைகளை உள்ளடக்கிய மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் இரண்டு பரிமாற்றக் குறிப்புகளையும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் முய்சு ஆகியோர் நேற்று பரிமாறிக் கொண்டனர்.
2023-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மாலத்தீவின் அதிபராக முய்சு தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து, பிரதமரின் அழைப்பை ஏற்று மலேசியாவிற்கு முதல் முறையாக பயணம் மேற்கொண்ட அவர் ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)