ஷா ஆலம், 07 மே (பெர்னாமா) -- நேற்று, ஷா ஆலம் நெடுஞ்சாலை கெசாசில், பெட்டாலிங் ஜெயாவை நோக்கிச் செல்லும் அவான் பெசார் ஓய்வுவெடுக்கும் பகுதிக்கு அருகில் வேன் ஒன்றில் இருந்து தூக்கி எறியப்பட்டதால் உயிரிழந்ததாக நம்பப்படும் பெண்ணின் கணவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
அலட்சியத்தால் மரணத்தை ஏற்படுத்தியதற்காக குற்றவியல் சட்டம், செக்ஷன் 304A-வின் இன் கீழ், பண்டார் கிண்ராராவில் நேற்று மாலை மணி 6 அளவில் 50 வயதான அந்நபர் கைது செய்யப்பட்டதாக செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர், ஏசிபி ஐடில் பொல்ஹசான் தெரிவித்தார்.
வீட்டிற்கு செல்லும் வழியில் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் வாய்த் தகராறு ஏற்பட்டதாக அச்சந்தேக நபர் ஒப்புக்கொண்டது முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் ஏசிபி ஐடில் பொல்ஹசான் கூறினார்.
திருமணமாகி 20 ஆண்டுகளான அத்தம்பதிக்கு இரு பிள்ளைகள் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, அச்சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் பரிசோதனையில், Methamphetamine, Amphetamine மற்றும் Benzodiazepine வகை போதைப் பொருள் உட்கொண்டது தெரிய வந்தது.
அதோடு, அவருக்கு ஒரு குற்றப்பதிவும் இரண்டு போதைப்பொருள் தொடர்பான குற்றப்பதிவுகளும் உள்ளன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)