பொது

பதின்ம வயது பெண் கடத்தல்; 20 வயது இளைஞருக்குத் தடுப்புக் காவல்

18/04/2025 07:41 PM

சிரம்பான், 18 ஏப்ரல் (பெர்னாமா) -- இம்மாதம் 10-ஆம் தேதி 20 லட்சம் ரிங்கிட் பிணைத் தொகைக் கோரி பதின்ம வயது பெண்ணைக் கடத்தியது தொடர்பான விசாரணைக்கு உதவும் பொருட்டு 20 வயதான இளைஞர் ஒருவர் இன்று தொடங்கி இரண்டு நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

அந்த இளைஞருக்கு எதிரான தடுப்புக் காவல் உத்தரவை, இன்று காலை மஜிஸ்திரேட் சைட் ஃபரிட் சைட் அலி பிறப்பித்ததாக நெகிரி செம்பிலான் போலீஸ் தலைவர் டத்தோ அஹ்மாட் சஃபிர் முஹமட் யூசோஃப் தெரிவித்தார்.

ஏப்ரல் 17-ஆம் தேதி சிலாங்கூர், கிள்ளானில் அந்நபர் கைது செய்யப்பட்டார்.

1961-ஆம் ஆண்டு கடத்தல் சட்டம், செக்‌ஷன் 3 (1)-இன் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி சிரம்பானில் ஓர் இளம் பெண்ணைக் கடத்திய சந்தேக நபர், சிலாங்கூர், கிள்ளான், பண்டார் புக்கிட் திங்கியில் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஊடகங்கள் முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தன.

இதனைத் தொடர்ந்து, 20 முதல் 31 வயதான மூன்று பெண்கள் உட்பட அறுவர் ஏப்ரல் 14-ஆம் தேதி தொடங்கி 14 நாட்களுக்கும் ஐம்பது வயதான மேலும் இரு பெண்கள் ஏப்ரல் 17-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 30-ஆம் தேதி வரையிலும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]