பொது

இஸ்மாயில் சப்ரி உட்படுத்திய விசாரணையில் 17 கோடியே 70 லட்சம் ரிங்கிட் பறிமுதல்

10/04/2025 05:17 PM

கோத்தா கினபாலு, 10 ஏப்ரல் (பெர்னாமா) --    முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப்பை  உட்படுத்திய விசாரணையில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்.பி.ஆர்.எம் 17 கோடியே 70 லட்சம் ரிங்கிட் ரொக்கப் பணம் உட்பட தங்கக் கட்டிகளையும் பறிமுதல் செய்துள்ளது.

இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில் அந்த ஆணையம், 2009-ஆம் ஆண்டு எஸ்.பி.ஆர்.எம் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்த 48 கோடியே 33 லட்சத்து 80 ஆயிரம் ரிங்கிட்டில் மிகப் பெரியத் தொகை அதுவாகும் என்று அதன் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அசாம் பாக்கி தெரிவித்தார்.

"இந்தத் தொகை பறிமுதல் செய்யப்பட்டது. AMLATFA (பயங்கரவாதம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலம் பணம் பெறுவதை தடுக்கும் சட்டம்)-இன் கீழ் முடக்கப்பட்டிருப்பது வேறு" என்று அவர் கூறினார்.

ஊழல் எதிர்ப்பு திட்டம்: சபா ஊடகவியலாளர்களுடன் எஸ்.பி.ஆர்.எம் என்ற நிகழ்ச்சியை தொடக்கி வைத்தப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் டான் ஶ்ரீ அசாம் பாக்கி அவ்வாறு கூறினார்.

2021-ஆம் ஆண்டு ஆகஸ்டில் இருந்து 2022-ஆம் ஆண்டு நவம்பர் வரையில் பதவியில் இருந்தபோது மலேசியக் குடும்பத் திட்டத்தை விளம்பரப்படுத்துவதற்கான செலவு உட்பட நிதி பெற்றது தொடர்பில் ஊழல் மற்றும் கள்ளப்பண பரிமாற்ற வழக்கு குறித்தும், பெரா நாடாளுமன்ற உறுப்பினருமான இஸ்மாயில் சப்ரியிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

2009-ஆம் ஆண்டு எஸ்.பி.ஆர்.எம் சட்டம் மற்றும் 2001-ஆம் ஆண்டு AMLATFA ஆகியவற்றின் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)