பொது

புத்ரா ஹைட்ஸ் தீச்சம்பவம் குறித்த விசாரணை 24 மணி நேரம் மேற்கொள்ளப்படுகிறது

08/04/2025 05:46 PM

சுபாங் ஜெயா, 08 ஏப்ரல் (பெர்னாமா) -- முதற்கட்ட அறிக்கையைத் தயாரிக்கும் பணியை விரைவுப்படுத்துவதற்காக, புத்ரா ஹைட்ஸில் நிகழ்ந்த எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவம் குறித்த விசாரணை தற்போது 24 மணி நேரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சம்பவ இடத்தில் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள பல தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து இம்முயற்சி மேற்கொள்ளப்படுவதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஒமார் கான் தெரிவித்தார்.

''நேற்று தொடங்கி நாங்கள் இரண்டு புதிய நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். முதலில் பணியில் ஈடுபடும் இயந்திரங்களை அதிகரித்துள்ளோம். இரண்டாவதாக, நேற்று முதல் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறோம். எனவே நேற்று முதல் சம்பவ இடத்தில் செயல்பாட்டுப் பணிகள் 24 மணி நேரமும் நடைபெறும்,'' என்றார் அவர்.

செவ்வாய்க்கிழமை, புத்ரா ஹைட்ஸில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ஹுசேன் அவ்வாறு கூறினார்.

முன்னர் அறிவிக்கப்பட்ட இரண்டு வார காலத்தை விட, விசாரணை கூடிய விரைவில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றாலும், மண்ணின் நிலை மற்றும் வானிலையைப் பொறுத்தே அது தீர்மானிக்கப்படும் என்றும் அவர் விளக்கினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)